×

புஞ்சை புளியம்பட்டியில் சிசிடிவி கேமரா விற்பனை கடையில் பொருட்களை அள்ளிய ‘பலே’ திருடன்

*வீடியோ காட்சியால் பரபரப்பு

சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டியில் சிசிடிவி கேமரா விற்பனை கடையில் பொருட்களை திருடன் அள்ளி சென்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புஞ்சை புளியம்பட்டியில் கோவை-சத்தியமங்கலம் சாலையில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கண்ணதாசன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். கடந்த 23ம் தேதி இரவு கண்ணதாசன் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணியை முடித்துவிட்டு கடைக்கு சென்று கடையின் கதவை திறந்து வைத்துவிட்டு கடையிலேயே படுத்து உறங்கினார்.

நேற்று முன்தினம் அதிகாலை திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்குள் புகுந்த திருடன் உறங்கி கொண்டிருந்த கண்ணதாசனின் அருகில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் கேமரா பொருத்த பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அடங்கிய 2 பெட்டிகளை திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியே சென்றான். பின்னர் தான் வந்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினான். ஆனால் உறங்கி கொண்டிருந்த கண்ணதாசனுக்கு இது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் திருடன் கடையில் புகுந்து திருடிய காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜெயக்குமார் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புஞ்சை புளியம்பட்டியில் சிசிடிவி கேமரா விற்பனை கடையில் பொருட்களை அள்ளிய ‘பலே’ திருடன் appeared first on Dinakaran.

Tags : Puliyampatti, Punchai ,Sathyamangalam ,Punjai Puliyampatti ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...